ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகள் போட்டு அசத்திய ஆலப்புழா கோழி
திருவனந்தபுரம்: நாட்டுக் கோழி ஒன்று சில மணிநேரங்களில் அடுத்தடுத்து 24 முட்டைகள் போட்டதைக் கண்ட கேரள மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அங்குள்ள ஆலப்புழா அருகே உள்ள அம்பலப் புழாவில் வசித்து வரும் பிஜூகுமார், அண்மையில் இருபது நாட்டுக் கோழிகளை வாங்கி அவற்றை தன் வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார். அவற்றுள் சற்றே பருமனாக உள்ள கோழிக்கு சின்னு என்று பெயரிட்டுள்ளார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு காலை 8.30 மணியளவில் சின்னு கோழி வழக்கம் போல் ஒரு முட்டை போட்டது. ஆனால் அத்துடன் நிற்கவில்லை. அடுத்தடுத்து தொடர்ந்து முட்டை போடத் தொடங்கியது. இதைக்கண்ட பிஜூகுமார், தன் நண்பர்களிடம் விவரம் தெரிவிக்க, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அவரது வீட்டில் கூடிவிட்டனர். சின்னு கோழியும் விடுவதாக இல்லை. அனைவரது முன்னிலையில் மதியம் சுமார் 2.30 மணி வரை இடைவிடாமல் 24 முட்டைகளைப் போட்டு அசத்தியது.
தற்போது ஆலப்புழா அதிசயக் கோழி என்றுதான் சின்னுவைக் குறிப்பிடுகிறார்கள்.
மேகதாது அணை: தமிழகம் அரசியல் செய்வதாக கர்நாடக முதல்வர் புகார்
திருவனந்தபுரம்: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்வதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார். ஒருமுறைகூட தமிழக அரசு மேகதாது திட்டத்துக்கு எதிராகப் பேசியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடப்பதால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
பெங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட இருவர் கைதாகினர். நேற்று முன்தினம் விமானப் பயணிகள் வழக்க மான சுங்கச்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கைகளால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை பெண் அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர் தமது உள்ளாடைக்குள் நூதன முறையில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 684 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஓர் ஆடவரிடம் இருந்து 240 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கணவரை நிர்வாணப்படுத்தி தண்டனை
ராய்பூர்: கணவரையும் கள்ளக் கா தலியையும் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய மனைவி கைதானார். சத்தீஸ்கர் மாநிலத்தின் கொண்டாகன் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் அத்தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தன் கணவரை வேறொரு பெண்ணுடன் நெருக்கமான கோலத்தில் பார்த்த மனைவி கடும் கோபமடைந்தார். பின்னர், கிராமசபையைக் கூட்டி அவர் புகார் அளித்தார். புகாரை விசாரித்த கிராமசபைத் தலைவர்கள் கள்ள உறவில் ஈடுபட்ட இருவரையும் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்ல உத்தரவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து கணவரை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய மனைவி உள்ளிட்ட ஐவரைக் கைது செய்தனர்.

