பாட்னா: இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு செய்யப்படும் முறையில் மாற்றம் செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இளையர்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நெருப்புப் பாதை ('அக்னிபத்') என்ற புதிய திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட இளையர்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர். எனினும் அவர்களால் நான்கு ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற முடியும்.
அதன் பின்னர் ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்கப்பட மாட்டாது. எனினும் துணை ராணுவப் படையில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கு இளையர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.
பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.
லக்னோவில் ஒரு ரயில்பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. ஏராளமானோர் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். ரயில் தண்டவாளங்கள் மறிக்கப்பட்டன.
கிழக்கு பீகார் காவல்துறை தலைவரான சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், 12க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
போராட்டக்காரர்கள் ஒரு ரயில் நிலையத்தை சூறையாடி உள்ளதையும் உறுதிப்படுத்தினார்.
"நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு வேறு எங்கு வேலை கிடைக்கும்? அச்சமயம் வீடற்றவர்களாக மாறியிருப்போம். எனவேதான் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்," என்று போராட்டக்காரர்கள் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிலர் சாலைகளில் வாகன டயர்களை எரித்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.

