திருவனந்தபுரம்: தனது மகள் நடத்தி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை ஷார்ஜாவில் தொடங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் விரும்பியதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கேரள அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஸ்வப்னாவும் ஒருவர்.
இந்நிலையில், அவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில், தனது மகள் நடத்தி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த கேரள முதல்வர் விரும்பியதாகவும் இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்தபோது அவரை பினராயி விஜயன் சந்தித்ததாகவும் ஸ்வப்னா தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் ஷார்ஜா அரசு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கேரள முதல்வரின் விருப்பம் நிறைவேறவில்லை என்றும் ஸ்வப்னா தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வரின் குடும்பத்தாருக்கும் தொடர்புள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் ஏற்கெனவே குற்றம்சாட்டி உள்ளார்.
இந்நிலையில், அவரது தரப்பில் இருந்தும் ஊடகங்கள் மூலமாகவும் வெளியாகும் தகவல்கள் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

