பெங்களூரு: கர்நாடகாவில் அரசு உயர் அதிகாரிகள் 21 பேரின் வீடு, அலுவலகங்களில் அம்மாநில ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
மாநிலம் தழுவிய அளவில் சுமார் 80க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையின்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பணம், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. அனைவரது வீடுகளிலும் ஒரே சமயத்தில் சோதனை நடத்தப்பட்டது. பெங்களூருவில் மட்டும் பத்து இடங்கள் குறி வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
உயரதிகாரி ஒருவரது வீட்டில் இருந்து இரண்டு கிலோ தங்கம், மற்றொருவர் வீட்டில் இருந்து ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
வேறோர் அதிகாரி தன் வீட்டுக் கழிவறையில் ரூ.21 லட்சம் ரொக்கப் பணத்தை சில நெகிழி உறைகளில் போட்டு பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

