கனமழைக்கு இதுவரை 54 பேர் பலி; 19 லட்சம் பேர் பாதிப்பு
கவுகாத்தி: அசாம், மேகாலயா மாநிலங்களில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 54 பேர் மாண்டுவிட்டனர்.
சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், 19 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
28 மாவட்டங்களில் உள்ள 19 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் 43 ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கிஉள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவையும் கனமழை விட்டுவைக்கவில்லை. அங்கு தலைநகர் அகர்தலாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. நேற்று முன்தினம் மேகத்திரள் காரணமாக ஆறு மணி நேரத்தில் மட்டும் 145 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி பகுதியில் நூறாண்டுகளுக்குப் பிறகு அதிக மழை பெய்துள்ளது. உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள பகுதி சிரபுஞ்சி ஆகும்.
பங்ளாதேஷ் நிலவரம்
இதற்கிடையே, இந்தியாவின் அண்டை நாடான பங்ளாதேஷ் தொடர் மழையால் பெரும் சேதங்களைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் நான்கு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சில்ஹெட், சுனம்கஞ்ச் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இவ்விரு மாவட்டங்களுடனான சாலை போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியன துண்டிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகமும் தடைபட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

