ஆந்திரா: செகந்திராபாத் ரயில் நிலைய கலவரத்தின் பின்னணியில் 'அக்னிபாதை' திட்டத்தை எதிர்த்து தனியார் ராணுவப்் பயிற்சி மையம் செயல்பட்டது அம்பலமாகி உள்ளது.
இந்த கலவரத்தில் முதன்முதலில் 2 ரயில் பெட்டிகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, இதன் பின்னணியில் தனியார் ராணுவப் பயிற்சி மையம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், நரசராவ்பேட்டையைச் சேர்ந்த ராணுவப் பயிற்சி மையத்தின் இயக்குநரான முன்னாள் ராணுவ வீரர் சுப்பாராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தன்னிடம் பயிற்சி பெறும் இளைஞர்களை நாடு முழுவதும் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்கு அழைத்துச் செல்வார்.
செகந்திராபாத் ரயில் நிலைய போராட்டத்தில் அவர்களை
சுப்பாராவ் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபட வைத்ததுடன் அவர்களுக்குத் தண்ணீர், மோர், சாப்பாடு வழங்கியுள்ளார்.
கலவரத்துக்கு முந்தைய நாள், சுப்பாராவின் பயிற்சி மையத்தில் இருந்து 450 பேர் ஹைதராபாத் வந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 52 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த ரயிலுக்குத் தீ வைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் 12 ரயில்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. அதனால் சுமார் 220 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் மட்டுமன்றி நேற்று காலை பீகார் உள்பட சில மாநிலங்களில் லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்
களுக்கும் தீ வைக்கப்பட்டன.
இதன் காரணமாக ரூ.170 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். 'அக்னிபாதை' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் அகில இந்திய மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களுடைய டுவிட்டரில் வேளாண் சட்டம் போல இதுவும் திரும்பப் பெறவேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.
'அக்னி பாதை' திட்டம் தொடர்பாக முப்படைத் தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினர்.
இதுபற்றி ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி கூறுகையில், "ராணுவத்தில் சேர ஒழுக்கம் மிக அவசியம். வன்முறையில் ஈடுபட்டு பொதுச்
சொத்துகளைச் சேதப்படுத்துவோர் ராணுவத்தில் சேர முடியாது.
"நாசவேலைகளில் ஏதும் ஈடுபடவில்லை என காவல்துறை சான்று பெற்றுத் தந்தால்தான் ராணுவத்தில் சேர முடியும்.
"அக்னிபாதை' திட்டத்தால் ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் மூன்று படைகளிலும் சேர வாய்ப்பு உள்ளது.
"அக்னிவீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். அக்னிவீரர்கள் உயிர் தியாகம் செய்தால் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். 'அக்னிபாதை' திட்டம் திரும்பப் பெறப்படாது," என்று அறிவித்துள்ளார்.
'அக்னிபாதை' திட்டத்தைத் எதிர்த்து கலவரத்தைத் தூண்டிவிட்ட ராணுவப் பயிற்சி மையம்
'அக்னிபாதை' திட்டத்தைத் எதிர்த்து பீகாரில் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. படம்: இந்திய ஊடகம்

