புனே: உலகின் மிகப்பெரிய மொட்டை மாடியை 3 ஏக்கர் பரப்பளவில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் நிறுவனம் அமைத்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய மொட்டை மாடியாக சிங்கப்பூரின் 'மரினா பே சேண்ட்ஸ்' கட்டடம் விளங்கி வருகிறது. இது 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்குச் சொந்தமான, 'டிரம்ப் ரியல் எஸ்டேட் நிறுவனம்,' மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் 3 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மொட்டை மாடியைக் கட்டி வருகிறது. டிரம்ப் நிறுவனத்தின் இந்திய கிளையின் அதிகாரி கல்பேஷ் மேத்தா இதை தெரிவித்துள்ளார்.
அவர் அதுபற்றி கூறுகையில், ''புனேயில் 3 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் இந்த மொட்டை மாடியின் பணிகள் 50 விழுக்காடு முடிவடைந்துவிட்டன. 17 மாடிகள் அடங்கிய 5 கட்டடங்களின் மீது இந்த மொட்டை மாடி அமைய இருக்கிறது.
"இதில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா, பூந்தோட்டம், நடைப்பயிற்சிப் பாதை, உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், உணவகம், உணவருந்தும் பகுதி ஆகியவை அமைகின்றன.
"இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 70 விழுக்காடு வீடுகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. இதன் அருகே 6.7 ஏக்கரில் மற்றொரு கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
"இந்த கட்டடத்தின் உள்கட்டமைப்பை பாலிவுட் வடிவமைப்பாளர் சுசன் கான் வடிவமைத்துள்ளார். இவர் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி,'' என்றார்.
பூங்கா, பூந்தோட்டம், உடடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம் ஆகியவற்றுடன் 3 ஏக்கர் பரப்பளவில் மொட்டை மாடி.
படம்: ஊடகம்