கவுகாத்தி: இந்தியாவில் வடகிழக்கு, வட மாநிலங்களில் நீடித்து வரும் கனமழைக்கு நேற்று முன்தினம் மேலும் 26 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, அண்டை நாடான பங்ளாதேஷில் லட்சக்கணக்கான மக்கள் கனமழை காரணமாக வீடுகளில் முடங்கி உள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாமில் மழை நீடித்து வரும் நிலையில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. அம்மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் சுமார் 5,140 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நிலச்சரிவில் சிக்கி மேலும் மூன்று பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஆறு பேரும் பலியாகிவிட்டனர் என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
பீகார் மாநிலத்திலும் பலத்த மழை நீடித்து வருகிறது. கிழக்கு பீகாரில் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்துவிட்டனர்.
அசாம் மாநிலத்தை கடந்த மூன்று மாதங்களாகவே பருவ மழை பதம் பார்த்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் பருவ மழைக் காலத்துக்கும் முன்பே அங்கு மழை பெய்யத் தொடங்கியது.
அச்சமயம் 44 பேர் மழை, வெள்ளத்துக்குப் பலியாகினர். வெள்ள நீர் வடிவதற்கு சில வாரங்கள் ஆகின. எனினும் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக அம்மாநிலம் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
மழையுடன் தொடர்புடைய மரணச் சம்பவங்களின் எண்ணிக்கை 71ஆக கூடியுள்ளது.
மேகாலயாவில் வியாழக்கிழமையன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் மாண்டுவிட்டனர். கர்நாடகாவிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பங்ளாதேஷ் நிலவரம்
இதற்கிடையே, அண்டை நாடான பங்ளாதேஷில் வடகிழக்கு மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைந்ததை அடுத்து அங்கு வெள்ள நீர் மெல்ல வடிந்து வருகிறது. எனினும் சில்லெட் மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
நிவாரண மையங்கள் நிரம்பி வழிகின்றன. கடும் உணவு, குடிநீர்ப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் மக்கள் வீடு திரும்ப அஞ்சுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஏராளமானோர் வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது.
அந்நாட்டின் தென்கிழக்கு மாவட்டங்களிலும் கனமழை நீடித்து வருவதையடுத்து, நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

