முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை; ரயில்கள் ரத்து
புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இத்திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், மத்திய அரசின் கருத்தை கேட்காமல் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக அக்னிபாதை திட்டம் என்பது சட்டம், இந்திய அரசியலமைப்புக்கு எதிராக தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அக்னிபாதை திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழு அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 'அக்னிபாதை' திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் 24ஆம் தேதி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விவசாயிகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் வெளியிட்ட டுவிட்டர் பதிவு ஒன்றில், நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அக்னிபாதை திட்டம் தொடர்பாக தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளின் தளபதிகளையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
முப்படைத் தளபதிகளும் தனித்தனியாக பிரதமரை சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டங்களின்போது வெடித்த வன்முறை காரணமாக கடந்த ஆறு நாள்களில் மட்டும் ரூ.700 கோடிக்கும் மேலான மதிப்புள்ள பொதுச்சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெறுகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது ஐநூற்றுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் இந்திய ரயில்வேக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சத்யாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற இளையர் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கைதாகினர்.
இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதி வழியில் போராட்டம் நடத்துவதைக்கூட மத்திய அரசு அனுமதிக்காதது ஏன்? என அக்கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

