ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்குத் தீ வைத்ததாக 52 இளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களின் பெற்றோர், நண்பர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் சிறைச்சாலை முன்பு குவிந்தனர். அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது ஏராளமான இளையர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ரயிலுக்குத் தீ வைத்ததுடன், ரயில் நிலையத்தில் இருந்த கடைகள், உணவகங்களையும் வன்முறைக் கும்பல் அடித்து நொறுக்கியதில் ரயில்வே துறைக்கு 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ரயில்வே காவல்துறையினர் 52 பேரைக் கைது செய்து சட்டம் ஒழுங்கு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதை அறிந்து அவர்களின் பெற்றோர் கதறி அழுதனர். இதற்கிடையே, ஆந்திர மாநிலம் கம்பம் பகுதியில் உள்ள சாய் ராணுவப் பயிற்சி மையத்தின் தலைவர் சுப்பாராவ், மாணவர்களைத் தூண்டிவிட்டு ரயிலுக்குத் தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைதானார்.

