மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் 'மகாவிகாஸ் அகாடி' என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார்.
288 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 2019 தேர்தலில் சிவசேனா 55, தேசியவாத காங்கிரஸ் 53 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றின. பெரும்பான்மைக்கு 144 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் சுயேச்சைகள் உதவியுடன் 167 எம்எல்ஏக்களின் ஆதரவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
இதனிடையே, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளார். அவர் தமது ஆதரவாளர்களான 40 எம்எல்ஏக்களுடன் குஜராத் மாநிலம் சூரத்திற்குச் சென்றார். 40 எம்எல்ஏக்களில் 33 பேர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் தம்வசம் 40 சிவசேனா எம்எல்ஏக்கள், 6 சுயேட்சைகள் என 46 எம்எல்ஏக்கள் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சூரத்தில் இருந்து 40 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே அசாம் மாநிலம் கவுகாத்திக்குச் சென்றுள்ளார். இந்த விவகாரம் பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சிவசேனா சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டார்.
நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான வழிகளைத் தேட நேற்று உத்தவ் தாக்கரே தமது அமைச்சரவையைக் கூட்டி விவாதித்தார். அரசின் நிலைத்தன்மை, ஏக்நாத் ஷிண்டே உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநில அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத் நேற்று தமது டுவிட்டர் பதிவில், "தற்போது மராட்டிய அரசியலில் நிலவிவரும் குழப்பமான சூழ்நிலை மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் நிலைக்குக் கொண்டு செல்லலாம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

