புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்களைத் தொற்றியுள்ளது கொரோனா.
அரசியல் குழப்பம் மிகுந்து வரும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே, அந்த மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, 80, ஆகியோர் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் முதல்வர் உத்தவ், நேரடியாகத் தலையிட்டு அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், 73, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தமது டுவிட்டரில் தெரிவித்தார்.
அதேநேரம் குஜராத் மாநில பாஜக அரசின் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேலையும் கொரோனா கொள்ளைநோய் தொற்றியுள்ளது.
இதற்கிடையே, நேற்றுக் காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 12,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். இதனால் மாண்டோர் எண்ணிக்கை 524,903 ஆனது. தற்போது 81,687 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 10,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

