120 நாள்களுக்குப் பிறகு ஆக அதிக பாதிப்பு; மகாராஷ்டிர முதல்வருக்குத் தொற்று
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் அன்றாட எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது கடந்த 120 நாள்களில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை ஆகும்.
புதிய நோயாளிகளில் 60 விழுக்காட்டினர் மகாராஷ்டிரா, கேரளாவைச் சேர்ந்தவர்கள். டெல்லி, தமிழகம், மேற்கு வங்கும், உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தொற்று விகிதம் மெல்ல அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 43 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அன்றாட மரண எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 13ஆக இருந்த நிலையில், புதன்கிழமை 38ஆக கூடியுள்ளது. நாடு முழுவதும் 84,000 பேர் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் 3,260 பேர் புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளாகினர். தலைநகர் மும்பையில் மட்டும் 1,600 பேரைக் கிருமி தொற்றியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு இரு மடங்காகி உள்ளது.
ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் பத்து மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நான்கு மாவட்டங்களில் ஐநூறு முதல் ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர் என்றும் இது கடந்த திங்கள்கிழமை வரையிலான நிலவரம் என்றும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 15 நாள்களில் சில மாநிலங்களில் தொற்று பரிசோதனை உறுதி விகிதமும் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. கேரளா, மிசோரம், கோவா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ஜூன் 19ஆம் தேதியுடன் முடிவடையும் ஒருவார காலத்தில், தொற்று விகிதம் ஐந்து விழுக்காடாக பதிவாகி உள்ளது. அதே வேளையில், அசாம், டெல்லி, ஹரியானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தொற்று விகிதம் அதற்கு முந்தைய ஒருவார காலத்தைவிட இரட்டிப்பாகி உள்ளது.
நாடு முழுவதும் அன்றாடம் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதமானது, 2.55% ஆகவும் வாராந்திர விகிதமானது 2.67% ஆகவும் பதிவாகி உள்ளது. இது கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலான நிலவரம் ஆகும்.
தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் புதிதாக 928 பேர் பாதிக்கப்பட்டனர். மூன்று பேர் தொற்றுக்கு பலியாகிவிட்டனர்.
கடந்த புதன்கிழமை சத்தீஸ்கரில் 130 பேர், தெலுங்கானாவில் 434 பேர், கோவாவில் 156 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.
குஜராத்தில் புதிதாக 400 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 49 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேக்கும் அம்மாநில ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரிக்கும் கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, முதல்வர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆளுநர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜுக்கு இரண்டாவது முறையாக கிருமி தொற்றி உள்ளது. அவர் மூன்று தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்.
பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய அரசு நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டது.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநரான மருத்துவர் ரந்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத் தலைவர் மருத்துவர் பலராம் பார்கவா ஆகியோரும் அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

