மும்பை: இறுதிவரை முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக இருப்போம் என மராட்டிய விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இவ்வாறு உறுதிபட அறிவித்துள்ள நிலையில், தாம் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என சிவசேனா கட்சி எம்எல்ஏக்களில் யாரேனும் ஒருவர் தமது முகத்துக்கு நேராகத் தெரிவித்தால், தாம் அதற்குத் தயார் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 35 சிவசேனா எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக அணிவகுத்துள்ளனர். சுயேச்சைகள் உள்ளிட்ட மேலும் எழு எம்எல்ஏக்களும் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்துள்ளதால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் சிவசேனா எதிர்த் தரப்பு எம்எல்ஏக்கள் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதுடன், தற்போது அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ள அவர்கள் அனைவரும் உடனடியாக மும்பை திரும்பினால், மராட்டிய விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து விலகத் தயார் என சிவசேனா தலைமை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கட்சிக்கு எதிராக உள்ள எம்எல்ஏக்களை சமாதானம் செய்ய முடியும் என அக்கட்சித் தலைமை நம்புவதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான சூழலில், முதல்வர் உத்தவ் தாக்கரேக்கான தங்கள் ஆதரவை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உறுதி செய்துள்ளன.
"உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசைப் பாதுகாக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்வோம்," என தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார்.
கடந்த காலங்களில் இதேபோன்று கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவா மாநில அரசுகளைக் கலைக்க பாஜக முயன்றதாகவும் அவர் கூறினார்.

