புதுடெல்லி: அசாமில் மழை, வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பது பாஜகவினர் கண்களுக்குத் தெரியவில்லை என்றும் அதிகாரம் அவர்களின் கண்களை மறைத்துள்ளது என்றும் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் கூறியுள்ளார்.
அசாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் வேளையில், பிரதமர் மோடியோ ஆட்சிக் கவிழ்ப்பில் முனைப்பாக உள்ளார் என்றும் அவர் சாடியுள்ளார்.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் கனமழை காரணமாக சுமார் ஐந்து மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.
ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி கவலைப்படவில்லை என்றும் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா தலைமையிலான அரசை கவிழ்ப்பதில்தான் பிரதமரின் கவனம் உள்ளது என்று கௌரவ் கோகோய் விமர்சித்துள்ளார்.
"தற்போதுள்ள நெருக்கடி என்றால் அது அசாம் வெள்ளப்பெருக்குதான். இவ்வேளையில் பிரதமர் அங்கு நேரில் சென்று, சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்க வேண்டும்.
"அவரோ மகாராஷ்டிர அரசை கவிழ்ப்பது அல்லது குஜராத் தேர்தல் ஆகியவற்றில்தான் முனைப்பாக உள்ளார். பாஜகவினருக்கு அதிகாரம்தான் ஒரே குறிக்கோள்," என்று கௌரவ் கோகோய் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

