புதுடெல்லி: உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களுடைய கல்வி தடைபடாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உக்ரேன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரேனில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் உள்ளது. இந்நிலையில், உக்ரேன் கல்லூரிகளில் படித்து வந்த டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள தேசிய மருத்துவ ஆணையம் முன்பு நேற்று முன்தினம் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
உக்ரேனில் நிலவும் பதற்ற நிலை காரணமாக அங்கு படிப்பைத் தொடர முடியவில்லை என்றும் இதனால் ஒரு கல்வியாண்டை இழக்க நேரிட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்த இழப்பை தடுக்க ஏதுவாக இந்த ஒரு கல்வியாண்டில் மட்டும் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என அம்மாணவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ மாணவர்கள் எதிர்கால மருத்துவர்கள் என்பதால், இணைய வழிக்கல்வி என்பது சரியாக இருக்காது என்றும் கல்வியாண்டு இழப்பை தடுக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் உக்ரேன், இந்திய மருத்துவ மாணவர்களின் பெற்றோர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ள நிலையில், உக்ரேனில் படித்து வந்த மருத்துவ மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கலாம் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.

