கௌஹாத்தி: அசாம் மாநிலத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக அங்கு பெய்து வரும் பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 28 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மீட்புக் குழுவினரும் ராணுவத்தினரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அசாம் போக்குவரத்துத்துறை அமைச்சர் பரிமால் சுக்லபைத்யா நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டாா்.
கச்சார் மாவட்டத்திலுள்ள சில்சார் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள நோயாளி ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் தவிப்பது குறித்து அவருக்குத் தெரியவந்தது.
அந்நோயாளி 'டயாலிசிஸ்' சிகிச்சை பெற வேண்டியிருப்பதை அறிந்த அமைச்சர், உடனடியாக அவரை தாம் வந்த படகில் ஏற்றிக்கொண்டு, தாமே துடுப்புப்போட்டு சற்று தூரத்தில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் வரை அழைத்துச் சென்றார்.
அதன் பிறகு அந்த நோயாளி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் படகோட்டியாக மாறிய காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

