மாநிலம் முழுவதும் சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
மும்பை: தமக்கு நெருக்கமாக இருந்தவர்களே தன் முதுகில் குத்திவிட்டதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
தமது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நேரத்தை அரசியல் எதிரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக சிவசேனா கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அம்மாநில அமைச்சரும் சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
அக்கட்சியின் நாற்பதுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் தற்போது அசாமில் முகாமிட்டுள்ளனர். இதனால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழும் ஆபத்து நிலவுகிறது.
இந்நிலையில் தாம் முதல்வருக்கான அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்துவிட்டதாகவும் கட்சியின் நலன் கருதி முதல்வர் பதவி, கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காணொளி வசதி மூலம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் யாரையும் சில காலம் சந்திக்க இயலாமல் போனது என்றார்.
"மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டேன். இந்த வாய்ப்பை அரசியல் எதிரிகள் பயன்படுத்திக்கொண்டனர். இவை அனைத்துக்கும் பாஜக தான் காரணம். உடல்நலப் பாதிப்பால் நான் திரும்பிவர மாட்டேன் என நினைத்துவிட்டனர்.
"இன்று எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சிவசேனா நிறுவனர் பாலாசாஹேப் பெயரைப் பயன்படுத்தாமல் தேர்தலில் வென்று காட்ட முடியுமா," என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கிடையே, தன்னுடன் இணைந்துள்ள சிவசேனா எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி இழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இயலாது என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். கட்சித்தாவல் தடைச் சட்டத்தைக் காண்பித்து மிரட்டினால் யாரும் பயந்துவிடப்போவ தில்லை என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாமை விட்டு வெளியேற கோரி காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் கவுகாத்தி யில் சிவசேனா எம்எல்ஏக்கள் தங்கியுள்ள நட்சத்திர தங்குவிடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புனே நகரில் சிவசேனா எம்எல்ஏ தனாஜி சாவந்தின் அலுவலகத்தை அக்கட்சித் தொண்டர்கள் நேற்று சூறையாடினர். மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டு வரும் எம்எல்ஏக்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.