மும்பை: சிவசேனா கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேருக்கு நேற்று தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வல், 27ஆம் தேதி மாலைக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அவர்கள் சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவுடன் அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
இதையடுத்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரையும் தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வலிடம், சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதன்படி, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை சபாநாயகர் நேற்று தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். அதில், கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்குச் சரியான காரணம் மற்றும் கட்சிக்கு எதிராகச் செயல்படும் உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது? போன்ற கேள்விகளுக்கு இன்று (27.6.2022) மாலைக்குள் பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் குழுவுக்கு 'சிவசேனா பாலசாஹிப்' என பெயரிட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, ''பாலசாஹிப் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது,'' என்றார்.
சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் டுவிட்டரில் விடுத்த செய்தியில், ''அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்பி வரவில்லையெனில், சிவசேனா தொண்டர்கள் இன்னும் தெருவுக்கு வரவில்லை. வந்தால் தீப்பற்றி எரியும்,'' என மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் புனேயிலும் தானே மாவட்டத்திலும் சிவசேனா அதிருப்தியாளர்களின் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மும்பை காவல்துறை நேற்று ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.
அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, மும்பையில் சர்ச்சைக்குரிய பதாகைகள் ஒட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் குழுவின் தலைவா் ஷிண்டே வதோதராவில் பாராதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா, மகாராஷ்டிர பாஜக தலைவா் பட்னாவிஸ் ஆகியோரை குஜராத் மாநிலத்தின் வதோதராவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜகவுடன் இணைந்து ஆட்சிஅமைப்பது குறித்து அமித்ஷா, பட்னாவிசுவுடன் அவா் ஆலோசனை நடத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்படுத்தியதன் பின்னணியில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பாஜக இரண்டாம் கட்டத் தலைவர்கள் ரகசியமாக பணியாற்றியுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 40 பேர் உட்பட 50 பேர் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளதாகவும் அவர்கள் 30ஆம் தேதியே மும்பைக்குத் திரும்புவர் என்றும் கூறப்படுகிறது.

