புதுடெல்லி: இந்திய இளையர்கள் விண்ணைத் தொடுவதற்குத் தயாராக உள்ளனர். அதனால் இத்துறையில் இனியும் இந்தியா பின்தங்காமல் சாதனை படைக்கும் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இதற்கான கருத்துகள், தகவல்களை மக்களிடம் இருந்தே பெற்று தனது பேச்சை பிரதமர் வடிவமைக்கிறார். அந்தவகையில் நேற்று ஜூன் 26ஆம் தேதி அவரின் உரை ஒலிபரப்பானது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:
பறிபோன ஜனநாயகம்: 1975ல் இதே ஜூன் மாதத்தில் தான் இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது.
மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. மக்களின் வாழும் உரிமை, தனிநபர் உரிமையும் கூட கேள்விக்குறியாகின. இந்திய ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி நடைபெற்றது. பிரபல பாடகர் கிஷோர் குமார் கூட அரசைப் புகழ மறுத்ததால் பாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. நெருக்கடிநிலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஜனநாயகம் வென்றது.
விண்வெளித்துறையில் சாதனை
விண்வெளித்துறையில் இந்தியா அளப்பரிய சாதனைகளை செய்து வருகிறது. அண்மைக்காலமாக விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. 'இன்-ஸ்பேஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
இந்த அமைப்பு தனியார் நிறுவனங்கள் விண்வெளித் துறையில் ஆராய்ச்சிகளை முன்னெடுக்க உதவும். 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் விண்வெளித் துறையில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் அதிகமில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, நம் நாட்டின் இளைஞர்கள் தங்களின் புத்தாக்கத் திறன்கள் மூலம் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
மிதாலி ராஜுக்குப் பாராட்டு
அனைத்துலக கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வுபெற்ற, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அண்மையில் தனது ஓய்வை அறிவித்தார். 39 வயதான அவர் சுமார் 23 ஆண்டு காலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.
மிதாலி ராஜ் பற்றி பேசிய பிரதமர், மிதாலி ஒரு தனிச்சிறப்பான கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. அவர் மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்கக் கூடியவர். அதேபோல், ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவையும் வாழ்த்திப் பேசினார் பிரதமர் மோடி.
அப்போது பிரதமர், பின்லாந்தில் நடந்த போட்டிகளில் தங்கம் வென்றதோடு அவர் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.