பாட்னா: பீகார் மாநிலத்தின் பாட்னாவில் மருந்துப்பொருள்களின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணிக்கும் மருந்துப் பொருள் ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் லஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் பெரிய அளவில் பணக்கட்டுகள், தங்கம், வெள்ளி ஆகியவை சிக்கின.
ஆய்வாளர் ஜிதேந்திர குமாரின் மீது வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் அவரது வீட்டில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர், படுக்கையில் பதுக்கி வைத்திருந்த பண நோட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவரிடம் இருந்து ஏராளமான தங்கம், வெள்ளி, நான்கு ஆடம்பரக் கார்கள் ஆகியவற்றுடன் ஏராளமான நிலம், வீடுகளின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பஞ்சாப்பில் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சே பாப்லி என்பவரது வீட்டில் லஞ்ச ஊழல் வழக்குத் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி, நான்கு ஐஃபோன்கள் உள்ளிட்ட நவீன கைத்தொலைபேசிகள், நவீன கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சஞ்சே பாப்லி கடந்த ஜூன் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, சோதனை நடந்தபோது சஞ்சய் பாப்லியின் மகன் கார்த்திக் (26) வீட்டின் முதல் தளத்தில் உயிரை மாய்த்துக்கொண்டார். தந்தை ஊழல் புகாரில் சிக்கியதால் அவமானம் தாங்காமல் அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கார்த்திக்கை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.