மும்பை: மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நான்கு தளங்கள் கொண்ட அந்தக் கட்டடம் சிதிலமடைந்து இருப்பதாகவும் அங்கு குடியிருப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சி ஏற்கெனவே எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதைப் புறந்தள்ளிவிட்டு சில குடும்பங்கள் அங்கு தொடர்ந்து வசித்து வந்ததாகவும் அதன் காரணமாக இந்தத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
மீட்புப் பணிகள் நேற்று மாலை வரை நீடித்த நிலையில், உயிரிழப்பு அதிகரித்ததா எனத் தெரியவில்லை.

