புதுடெல்லி: நாட்டில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நூறாயிரத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் புதிதாக 14,506 பேருக்கு கிருமி தொற்றியது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து, மாநில அரசுகள் தொற்றுப்பரவலைத் தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,482 பேரும் கேரளாவில் 2,993 பேரும் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் புதிதாக 1,484 பேருக்கு தொற்று உறுதியானது.
செவ்வாய்க்கிழமை மேலும் முப்பது பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து, ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 525,077ஆக உயர்ந்துள்ளது.
இதில் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 12 மரணங்களும் அடங்கும்.
செவ்வாய்க்கிழமை அன்று மகாராஷ்டிராவில் 5 பேர், டெல்லியில் 4 பேர், கோவாவில் 3 பேர், பீகாரில் 2 பேர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாபில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 11,574 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 98.56 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதே வேளையில் உயிரிழந்தோர் விகிதம் 1.21%ஆக குறைந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் தொற்று பாதிப்புக்காக 99,602 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மேலும் 1,344,788 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 433,659 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 86.19 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பிரபல மலையாள நடிகை அம்பிகா ராவ் (58 வயது) கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார். உதவி இயக்குநராக பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ள அவர், சில மலையாளப் படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் முத்திரை பதித்தவர். 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
மீண்டும் தலையெடுக்கும் கொரோனா; பிரபல நடிகை பலி

