மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
அரசியல் மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இன்று சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் அதில் பங்கேற்பர் என அவர்களுக்குத் தலைமையேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக, சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்தது.
அதன் பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா கூட்டணி அரசு அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.
எனினும் சிவசேனா எம்எல்ஏக்கள், நிர்வாகிகளில் சிலர் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் திடீரென சிவசேனா எம்எல்ஏக்கள் பலர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணிதிரண்டனர். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவிலும் 37 எம்எல்ஏக்கள் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பரபரப்பான சூழலில், முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு, சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள சிவசேனா கட்சித் தலைமை, ஆளுநரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அக்கட்சி கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்துள்ள மனுவில், 16 சிவசேனா எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது எனவும் சுனில் பிரபு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் வரை அசாம் மாநிலத்தில் தங்கியிருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று கோவா மாநிலத்துக்குச் சென்றுள்ளதாகவும் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடப்பது உறுதியானால், அவர்கள் அங்கிருந்து மும்பை செல்வார்கள் என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே அணியில் 46 எம்எல்ஏக்கள் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் 39 பேர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மீதமுள்ள ஏழு பேர் சுயேச்சை எம்எல்ஏக்கள் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் அரசுக்கு எதிராக வாக்களிக்கும் பட்சத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

