புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் இருந்து ஆர்சிபி சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகிய இருவரும் திடீரென விலகி இருப்பது பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூலை 7ஆம் தேதி (இன்று) நிறைவடைகிறது.
இதையடுத்து, அவர்களது அமைச்சர் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என்றும் மீண்டும் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்காமல் இருவரும் அமைச்சரவையில் இருந்து விலகி உள்ளனர்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்தார் அப்பாஸ் நக்விக்கும் ஆர்சிபி சிங்குக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இதற்கிடையே, துணை அதிபர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை அதிபர் வேட்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, இன்று பாஜக துணை அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் என தகவல் வெளியானது. தற்போது முக்தார் அப்பாஸ் நக்வி பதவி விலகி உள்ளார். எனவே, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

