கொழும்பு: முக்கிய தலைவர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயற்சி மேற்கொண்ட நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் பணிக்கு வருவதைத் தவிர்ப்பதாக தெரிய வந்துள்ளது.
சில தலைவர்களும் அரசு உயர் அதிகாரிகளும் நாட்டைவிட்டு வெளியேறும்போது பணியில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்றுப் பிற்பகல் முதல் அந்நிறுவன ஊழியர்கள் பணி புறக்கணிப்பு நிலைப்பாட்டை மேற்கொண்டதாக இலங்கையின் 'டெய்லி மிரர்' ஊடகத்தை மேற்கோள் காட்டி, 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளியல், அரசியல் நெருக்கடிகளுக்கு காரணமானவர்கள் என்று கூறப்படும் பலர், விமானம் மூலம் வெளியேற முயற்சி செய்வதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
எனவே, இந்த நெருக்கடியான வேளையில் விமான நிலையம், அலுவலகத்தில் பணியில் இருந்தால் அந்த முக்கிய பிரமுகர்களுக்கு சேவையாற்ற வேண்டியிருக்கும் என்பதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் பணிக்கு வருவதைத் தவிர்ப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையே, நாடு முழுவதும் 450 கிராம் ரொட்டியின் விலை, தற்போது உள்ளதைவிட 20 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல் ரூ.84.50க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் பல்வேறு உணவுப் பொருள்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
பிரமுகர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க முடிவு; கோதுமை மாவு விலை 400% உயர்வு

