கொழும்பு: தங்கள் குழந்தைகள் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும் என்பதற்காக இலங்கையில் பெற்றோர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே சாப்பிடுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பாட் கம்மின்ஸ் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஒரு தங்குவிடுதியின் ஊழியருடன் பேசியபோது, தமக்கு இலங்கையின் தற்போதைய நிலை குறித்தும் அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் நிறைய தகவல்கள் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவராக உள்ள பாட் கம்மின்ஸ், இலங்கை மக்கள் சிலரை தாம் சந்தித்தபோது, அவர்களது சொந்த அனுபவங்களைக் கேட்டு வேதனை அடைந்ததாகக் கூறியுள்ளார்.
"தங்குவிடுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்றபோது கார் ஓட்டுநர் உள்ளிட்ட சிலரைச் சந்திக்க முடிந்தது. தாங்கள் ஒரு நாள் சாப்பிடுவதாகவும் மறுநாள் பட்டினி கிடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்கள் குழந் தைகளுக்காக உணவைத் தியாகம் செய்கின்றனர்.
"இலங்கை மக்களின் இந்த அவல நிலை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அனைவரும் இந்தப் பிரச்சினை குறித்து நிறைய பேசினோம்.
"இந்த முறை இந்தப் பயணம் இலங்கையில் கிரிக்கெட் விளையாடுவதற்கும் அப்பால் எங்களுக்கு சில விஷயங்களை அறிவுறுத்தியது," என்று பாட் கம்மின்ஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
போராட்டம்; கிரிக்கெட் ஆட்டம்
இலங்கையில் கடும் பொருளியல் நெருக்கடி நிலவி வரும் நிலையில், அங்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தலைநகர் கொழும்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபர் மாளிகையும் அலுவலகமும் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய நெருக்கடியான கலவரச் சூழ்நிலையில், ஆஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் எந்தச் சிக்கலும் இன்றி நடைபெற்றது.
இப்போட்டியைக் காண சில கிரிக்கெட் ரசிகர்கள் திடலுக்கு வந்திருந்தனர். இலங்கை அணி வீரர்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி விளையாடினர். போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
காலே நகரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றாலும், கிரிக்கெட் போட்டிக்கு போராட்டக் காரர்கள் இடையூறுகள் ஏதும் ஏற்படுத்தவில்லை.

