கொழும்பு: கடும் கொந்தளிப்புக்கு மத்தியில் நேற்றுப் பிற்பகல் முதலாக 120,000 சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகம் தொடங்கியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது.
தலைநகர் கொழும்பு, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த விநியோகம் தொடங்கி உள்ளதாக இந்நிறுவனம் கூறியது.
இன்று முதல் நாட்டின் இதர பகுதிகளிலும் சமையல் எரிவாயு விநியோகம் தொடங்கும் என்றும் கடந்த மாதம் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு தொடர்பான விவரங்களை பயனீட்டாளர் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சமையல் எரிவாயு உருளைகளைப் பதுக்கி வைப்பது முறியடிக்கப்படும் என்றும் இம்மாத இறுதிக்குள் நாட்டின் மொத்த சமையல் எரிவாயு தேவையை ஈடுகட்டும் அளவுக்கு அதன் விநியோகம் சீரடையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

