கொழும்பு: இலங்கைப் பிரதமரின் அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், அம்மாளிகைக்குள் இரு குழுவினருக்கிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில், பத்து பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கொழும்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதனால் இந்த மோதல் வெடித்தது என்பது தெரியவில்லை. கடந்த 9ஆம் தேதி முதல் இலங்கை அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையும் அலுவலகமும் போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே அலரி மாளிகை, அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என மூத்த பௌத்த பிக்கு சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தக் கட்டடங்களின் பாதுகாப்பு கருதி, தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அதிபர் பதவி விலகுவதாக கூறப்படுகிறது. எனவே, அவ்வாறு அவர் பதவி விலகியதும் போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும்," என சோபித தேரர் கூறியுள்ளார். ஆனால் போராட்டக்காரர்கள் அவரது கோரிக்கையை ஏற்கமறுத்துவிட்டனர்.

