புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 1 அமெரிக்க டாலருக்கு 79.5975 ரூபாய் என்று வீழ்ச்சி கண்டிருந்த மதிப்பு நேற்று மேலும் சரிந்து 79.6675 ஆனது. இதுதான் இந்திய ரூபாய் சந்தித்திருக்கும் ஆக மோசமான வீழ்ச்சி.
சரிவு தொடரும் என்றும் விரைவிலேயே 80 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சி அடையும் என்றும் நிதிச் சந்தை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அமெரிக்க பணவீக்க அறிக்கை வெளியாக இருக்கும் நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்தியச் சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
பல மில்லியன் டாலர் மதிப்புடைய இந்தியப் பங்குகளை அவர்கள் தொடர்ந்து விற்று வருகின்றனர். ரூபாயின் சரிவுக்கு இது ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

