நாட்டில் அமைதி திரும்ப ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வலியுறுத்து
கொழும்பு: இலங்கையில் பொதுமக்களின் எழுச்சிக்குப் பிறகு பதற்றம் நிலவும் நிலையில் நாட்டில் அமைதி திரும்ப அரசியல் கட்சித் தலைவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
சினமுற்ற மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால், அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பித்து வெளியேறினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் இருவரும் அதிபர் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை அமைதிப்படுத்தி வரும் 20ஆம் தேதிவரை பொறுமையுடன் இருக்கச் செய்வது அரசியல் கட்சித் தலைவர்களின் கைகளில்தான் இருக்கிறது என்று ராணுவத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் கருதுகின்றனர்.
முப்படைத் தளபதிகளின் வேண்டுகோள்
அரசியல் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரும் 20ஆம் தேதி வரை பொறுமை காக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று இலங்கையின் முப்படைத் தளபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற நாயகர் தலைமையில் நேற்று முன்தினம் மாலையில் கட்சித் தலைவர்களுடனான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைத் தளபதிகள், காவல்துறைத் தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அரசியல், பொருளியல் நெருக்கடிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் நாடாளுமன்றத்தில் தீர்வுகாணப்படும் என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் கட்சித் தலைவர்கள் செயலாற்ற வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
ஆனால், இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகவேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற நாயகரிடம் சமர்ப்பிக்கும் முன்னரே திரு ரணில் பதவி விலகவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பௌத்த தலைமை பிக்குகளின் வலியுறுத்து
இதற்கிடையே, இலங்கையின் மூன்று முக்கிய பௌத்த மடாலயங்களின் தலைமை பிக்குகள், இணக்கம் காணும்படி அரசியல்கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பும் பொதுமக்களின் பாதுகாப்பும் பெருத்த அபாயத்தில் இருப்பதாக அவர்கள் எச்சரித்தனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும்; தற்போதைய நெருக்கடிக்கு ஜனநாயக முறையில் சுமுகமான அரசியல் தீர்வை எட்டவேண்டும் என்று பிக்குகள் வலியுறுத்தினர்.
மூன்று முக்கிய பௌத்த மடாலயங்களின் தலைமை பிக்குகள் இணைந்து நேற்று கூட்டறிக்கை விடுத்தனர்.
மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, அனைத்துலக அரங்கில் இலங்கையின் பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் அரசியல் தலைவர்கள் இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்று அவர்கள் விடுத்த கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளையில், பொதுச் சொத்தை நாசமாக்க வேண்டாம் எனப் பொதுமக்களையும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அறிவுறுத்து
இவ்வேளையில், பிரச்சினையின் மூல காரணத்தைக் களைய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களின் புகார்களுக்குச் செவிமடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைவர் அன்டானியோ குட்டரஸ் கூறியிருக்கிறார்.
சுமுகமான ஜனநாயக மாற்றத்துக்கு உதவும் வகையில் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கும்படி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் நிலைமையைத் தாம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் உலக நிறுவனத் தலைவர் குறிப்பிட்டார்.
அண்டை நாட்டு ஆர்ப்பாட்டம்
இலங்கை மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அண்டை நாடான இந்தியாவிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட அதிபர் கோத்தபாய ராஜபக்சே எங்கு தஞ்சம் புகுந்தாலும் அவர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்; மக்கள் மன்றத்தில் அவர் நீதியை எதிர்கொள்ளவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். புதுடெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

