கொழும்பு: இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டாலோ பாதுகாப்புப் படையினர் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்த நேரிடும் என்று ராணுவத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் ஆயுதப்படையினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது முழு வீச்சில் செயலில் இறங்குவர் என்று அது தெரிவித்தது.
இலங்கை ராணுவத் தலைமையகம் நேற்று வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இம்மாதம் ஒன்பதாம் தேதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் உள்பட, தொடக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ராணுவம் அல்லது காவல்துறையினருக்கும் இடையில் உரசல்கள் அதிகம் நிகழவில்லை.
ஆனால் ஒரு சில சம்பவங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் வரம்பு மீறியதையும் அறிக்கை குறிப்பிட்டது.
ராணுவத்தினர், காவல்துறையினர் ஆகியோரையும் அவர்கள் தாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றதை அது சுட்டியது.
அதிக வன்முறை இன்றி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்வரை பிரச்சினை இல்லை.
இருப்பினும் அரசாங்கச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வன்செயல்களில் யாராவது ஈடுபட்டால் அவர்களை ஒடுக்குவதற்கான முழு அதிகாரமும் ஆயுதப்படைகளுக்கு இருப்பதை அறிக்கை சுட்டியது.
அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகும்வரை ஓயமாட்டோம் என்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களை இவர்கள் முற்றுகை இட்டுள்ளனர்.
இவ்வேளையில், அதிபரின் பதவி விலகலை அறிவிக்க ஏதுவாக நாளை நாடாளுமன்றக் கூட்டத்திற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
முன்னதாக நேற்று நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் இந்தக் கூட்டம் நடைபெறாது என்று நேற்றுப் பின்னேரம் நாடாளுமன்றத் தொடர்பு அலுவலகம் தெரிவித்தது.
அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஏற்கெனவே உறுதியளித்திருந்தபடி தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்காததால் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டது.

