அமராவதி: ஆந்திராவில் வரலாறு காணாத கனமழை பெய்ததை அடுத்து, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோர கிராமங்கள் தனித் தீவு
களைப்போல் காட்சியளிப்பதாக இந்திய ஊடகம் தெரிவித்தது.
அந்தக் கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்து கிராமங்களுக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் துண்டித்துள்ளது.
மேலும் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்குப் பேரிழப்பு
ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களிடம் அவர் கலந்துரையாடினார்.
மீட்பு பணிகளுக்குத் தலைமைதாங்கும் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க அவர் உத்தரவிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள
மக்களைப் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துயர்துடைப்பு முகாம்களில் தங்குவோருக்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில அதிகாரிகள் கூறினர்.
கிராமங்களிலிருந்து மக்களைப் படகுகளில் மீட்புப் பணியாளர்கள் வெளியேற்றி வருவதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்தது.
இந்நிலையில், அடுத்த சில மணி நேரத்துக்கு கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆற்றங்கரையோரக் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பல இடங்களில் கனமழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீகங்காநகரில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய்கள் மற்றும் பிற கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுகாதியா மார்க், அசோக் நகர், மீரா சௌக், சுகாடியா சர்க்கிள், பூரணி அபாடி போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

