மக்களின் கோபம், ஆவேசத்தின் உச்சகட்டமாக அதிபர் மாளிகை ஆக்கிரமிக்கப்பட்டது. கோத்தபாய ராஜபக்சே பதவி விலகியதைத் தொடர்ந்து மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களிலிருந்து வெளியேறி உள்ளனர்.
நாட்டைவிட்டுத் தப்பியோடி, சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தபாய ராஜபக்சேயும் அதிபர் பதவியிலிருந்து விலகியிருப்பதால் இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை அன்று இடைக்கால அதிபராக பொறுப்பு ஏற்றுள்ளார். அந்தப் பதவியில் அவர் நிரந் தரமாக நீடித்திருக்க ஆளும் கட்சி அவருக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இவரும் பதவி விலக வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தலைநகர் கொழும்பில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதால் வெள்ளிக் கிழமை காலை வர்த்தகங்கள், கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் ராணுவ வீரர்கள் இன்னமும் வலம் வருகின்றனர்.
அதே சமயத்தில் பெட்ரோல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 20ஆம் தேதி அதிபரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர். சுமார் 13 நிமிடங்களே நீடித்த முதல் கூட்டத்தில் கோத்தபாய ராஜ பக்சே தனது கடிதத்தில் எழுதியிருந்த சாதனைகள் வாசிக்கப்பட்டன. "பொருளியல் நெருக்கடியை நாம் எதிர்நோக்கியிருந்தாலும் கொள்ளைநோயிலிருந்து எங்கள் மக்களை பாதுகாக்க முடிந்ததில் எனக்கு தனிப்பட்ட திருப்தியைத் தருகிறது," என்று கடிதத்தில் கோத்தபாய ராஜபக்சே குறிப்பிட்டு இருந்தார்.

