ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் எந்த விசாரணையும் இன்றி நீண்ட கால சிறைவாசத்தை அனுபவித்து வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு பலர் பாதிக்கப்பட வழிவகுக்கும் நடைமுறைகளை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.
குற்றவியல் அமைப்பின் இத்தகைய செயல்முறையே ஒரு தண்டனைதான் என்றும் இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.
"நாட்டில் உள்ள 1,378 சிறைகளில் 6.1 லட்சம் கைதிகள் உள்ளனர். இவர்களில் 80 விழுக்காட்டினர் விசாரணைக் கைதிகள் ஆவர். இந்த விஷயத்தில் சிறைகள் 'கருப்புப் பெட்டி'களாக உள்ளன.
"இதில் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மீது சிறைச்சாலைகள் வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விசாரணைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது மட்டுமே இலக்காக இருக்கக் கூடாது. இந்த நடைமுறை குறித்த தெளிவும் வேண்டும்," என்றார் தலைமை நீதிபதி ரமணா.
நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கவலை தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்குத் தீர்வு காண வேண்டுமெனில், நாடு முழுவதும் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளுக்கான இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் நீதித்துறை கட்டமைப்பில் தேவையான சீர்த்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

