அமராவதி: ஆந்திராவில் நீடித்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த இருபது லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதையடுத்து, தோவலேஸ்வரம் அணையில் இருந்து 19.05 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக அம்மாநில பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மேலும் மோசமடைந்துள்ளது. ஆறு மாவட்டங்களில் உள்ள 628 கிராமங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 77 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேவைப்பட்டால் மீட்புப் பணியில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மத்திய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை விநியோகிக்க வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கனமழை, வெள்ளத்தால் அம்மாநிலத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
ஆந்திராவின் அண்டை மாநிலமான தெலுங்கானாவும் ஒடிசா மாநிலமும்கூட மழையின் கோரப்பிடியில் சிக்கி உள்ளன. இரு மாநிலங்களிலும் முந்நூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான பத்ராச்சலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பகுதியில் மழை, வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.
நேற்று காலை நிலவரப்படி ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக நாகௌர் மாவட்டத்தில் உள்ள மக்ரானா பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா, உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

