உயிரைப் பறிக்கச் சொன்னவரின் பதவியைப் பறிக்கும்வரை போராட்டம்
கொழும்பு: சில ஆண்டுகளுக்கு முன்பு தன் உயிரைப் பறிக்க உத்தரவிட்ட கோத்தபாய ராஜபக்சேவை இப்போது அதிபர் பதவியில் இருந்து அகற்றியதில் முக்கிய பங்காற்றி உள்ளார் சமூக செயல்பாட்டாளரான பிரேமகுமார் குணரத்னம் (படம்).
கடந்த 2012ஆம் ஆண்டு அன்றைய இலங்கை பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்த கோத்தபாய ராஜபக்சேவின் ஆள்களால் தாம் கடத்திச் செல்லப்பட்டதாகவும் தம்மைக் கொன்றுவிடுமாறு கோத்தபாய உத்தரவிட்டு இருந்ததாகவும் ஊடகப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சமயம் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசிய அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் 'வெள்ளை வேன்' என்று குறிப்பிடப்படும் பதிவெண்கள் இல்லாத வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடத்தப்பட்டடவர்களில் பெரும்பாலானோர் பிறகு திரும்பி வரவில்லை என்றார். தற்போது 56 வயதாகும் பிரேமகுமார் குணரத்னமும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இருந்த வேளையில் இவ்வாறு கடத்தப்பட்டார். எனினும் நான்கு நாள்களுக்குப் பிறகு எதிர்பாராத வகையில் விடுவிக்கப்பட்டார். அன்று பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்த கோத்தபாய ராஜபக்சே பின்னாள்களில் இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றார்.எனினும் பிரேமகுமார் குணரத்னம் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவில்லை. இலங்கையில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் மக்கள் போராட்டங்களை சத்தமின்றி வழிநடத்தி வந்தது இவர்தான் என இலங்கை ஊடகங்கள் கூறின.
இதன் மூலம் கோத்தபாயவை நாட்டைவிட்டே வெளியேறச் செய்ததும் இவர்தான் என்கின்றன அவை.
"இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. போராட்டங்கள் மூலம் உண்மையான ஜனநாயகம் என்றால் என்ன என்பதை மக்கள் புரிய வைத்துள்ளனர்," என்கிறார் பிரேமகுமார் குணரத்னம்.
ஆதிமூலம் பிள்ளை குணரத்னம், வள்ளியம்மா ராஜாமணி ஆகியோ ரின் மகன் பிரேமகுமார் குணரத்னம்.

