திருவனந்தபுரம்: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையைக் கழற்றிய பிறகு தேர்வு எழுத அனுமதித்ததாகக் கூறப்படும் சம்பவம் கேரளாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது அவமானகரமான ஒரு நிகழ்வு என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் ஆயூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வின்போது, அதை எழுத வந்த மாணவிகள், திடீரென உள்ளாடைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து புகார் அளித்த மாணவியின் வாக்குமூலத்தை பெண் அதிகாரிகள் மட்டுமே இடம்பெற்ற ஒரு குழு பதிவு செய்தது.
அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணை தொடங்கி உள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுதும் சுமார் 3,500 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்ற நிலையில், 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் இத்தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களில் 15 லட்சம் பேர் தேர்வை எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

