புதுடெல்லி: பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக பரபரப்பு நிலவியது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்த சில தினங்களுக்குள் எதிர்க்கட்சிகள் அதை மீறியுள்ளன.
விலைவாசி உயர்வு, பணவீக்க விகிதம், ஜிஎஸ்டி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்துவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை ஏற்க இயலாது என்றும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து இப்போராட்டத்தை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மாநிலங்களவையைச் சேர்ந்த திமுக, இடதுசாரி எம்பிக்கள் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
எனினும் நேற்று மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.

