புதுடெல்லி: நாடு முழுவதும் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள வேளையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.
இம்மாதம் 17ஆம் தேதி 200 கோடி தடுப்பூசிகள் என்னும் மைல்கல்லை எட்டியதையடுத்துப் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடிதத்தை எழுதியுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 'கோவின்' தளத்தில் இருந்து பிரதமரின் பாராட்டுக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும் என்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் 200 கோடி கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதைப் பாராட்டி 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருமிப்பரவலின் தாக்கத்தைத் தணிக்க இது உதவியதாக திரு கேட்ஸ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

