மலிகாபாத்: கலீம் உல்லா கானுக்கு வயது 82. உத்தரப் பிரதேசத்தின் மலிகாபாத்தில் 'மாம்பழ மனிதர்' என்ற செல்லப் பெயர் இவருக்கு உண்டு.
ஏறக்குறைய 120 ஆண்டுகள் பழமையான மாமரத்தை இவர் பேணிவருகிறார். தோட்டக்கலையில் 'கிராஃப்டிங்' எனப்படும் கிளையை வெட்டி ஒட்டும் முறை மூலம் இவர் இதுவரை 300 வகையான மாம்பழங்களை இந்த மரத்தில் விளைவித்துள்ளார்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய், பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போன்றோரின் பெயர்களை இந்த மாம்பழங்களுக்குச் சூட்டி மகிழ்கிறார்.
'அனார்கலி' எனும் வகை மாம்பழத்தில் இருவேறு தோல்கள் அடுக்கடுக்காய்க் காணப்படுகின்றன. உள்ளிருக்கும் பழத்திற்கு இருவேறு சுவையும் வித்தியாசமான மணமும் இருக்கிறது.
பாலைவனத்திலும் மாம்பழம் பயிரிடுவேன் என்று கூறும் இவருக்கு ஈரான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவற்றில் இருந்து சிறப்பு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
இவருக்கு 2008ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

