ஜிஎஸ்டி, விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரின் மூன்றாம் நாளான நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பணவீக்கம், அத்தியாவசியப் பொருள்கள் மீதான பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) போன்றவற்றைக் கண்டித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி, சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் முதலில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மாதம் 18ஆம் தேதி, தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான ஐந்து விழுக்காட்டு ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசாங்கம் அறிவித்தது.
இதனைத் திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மக்களவை கூடியதும், அவையின் மத்திய பகுதிக்குச் சென்றும் எதிர்க்கட்சியினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்த அமளியைத் தொடர்ந்து நாடாளுமன்ற நாயகர் ஓம்பிர்லா அவையை ஒத்திவைத்தார். இதற்கிடையே மாநிலங்களவையும் இத்தகைய ஆர்ப்பாட்டத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
சென்ற திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

