புதுடெல்லி: மத்திய அரசாங்க அலுவலகங்களில் 2021ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி ஏறக்குறைய 9.79 லட்சம் வேலைகள் காலியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 40.35 லட்சம் பணியிடங்கள் இருந்ததாகவும் இவற்றில் 30.56 லட்சம் பணியாளர்கள் மட்டுமே வேலை செய்ததாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.
அரசுத்துறை வேலைகள் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் துணையமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்திற்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள ஆய்வுப் பிரிவின் வருடாந்தர ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கத் துறை வேலைகளை உருவாக்குவதும் அவற்றுக்கான ஆள்சேர்ப்பும் அந்தந்த அமைச்சுகள், துறைகளின் பொறுப்பு என்று கூறிய திரு சிங், இது ஒரு தொடர்ச்சியான நடைமுறை என்றார். பணி ஓய்வு, பதவி உயர்வு, வேலை விலகல், உயிரிழப்பு போன்றவற்றால் வேலைகள் காலியாவதை அவர் சுட்டினார்.
மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில் மத்திய அமைச்சின் பல்வேறு பிரிவுகளில் 30.87 லட்சத்துக்கும் அதிகமானோர் நிரந்தர வேலையில் இருப்பதாகவும் இவர்களில் 3.37 லட்சத்துக்கும் மேலானோர் பெண்கள் என்றும் திரு. சிங் குறிப்பிட்டார்.
காலியாக உள்ள பணியிடங்களுக்கு கால வரையறை விதித்து ஆள்சேர்ப்பில் கவனம் செலுத்தும்படி அனைத்துத் துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

