புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நேற்று மக்களவை கூடியதும், விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேச முற்பட்டனர். எனினும், சபாநாயகர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அக்கட்சியின் தமிழக எம்பிக்களான ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் உட்பட நான்கு பேர், கையில் கண்டன வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியபடி, மக்களவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பியதால் சபாநாயகர் கண்டித்தார்.
அவைக்குள் பதாகைகளை ஏந்தி, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்க்கட்சி எம்பிக்களும் விலைவாசி உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதுடன் மத்திய அரசைக் கண்டித்தும் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் அமளி நிலவியது.
சபாநாயகர் பலமுறைக் கேட்டுக்கொண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் அமராமல், அமளியில் ஈடுபட்டதை அடுத்து, அவை நடவடிக்கைகளை பிற்பகல் மூன்று மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
அதன் பின்னர் அவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நான்கு பேரை இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.
மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல், நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இப்பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தி உள்ள நிலையில், மத்திய அரசு இக்கோரிக்கையை ஏற்கவில்லை.
மக்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சபாநாயகர் அறிவிப்பு

