திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கியுள்ள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையை பெங்களூரு நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது எனக் கோரி இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவசங்கர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளரான அவர், தமது தரப்பை விசாரிக்காமல் வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
"ஒரு வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வேறு மாநிலத்துக்கு அந்த வழக்கை மாற்றக்கூடாது.
"ஆனால், இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக தொடுக்கப்பட்டது. எனவே, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது சரியல்ல," என்று சிவசங்கர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை வலுவிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைள் பகிரங்கமாக நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை சாடியுள்ளது.
மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதையும் மத்திய சட்ட ஆணையத்தில் அமலாக்க முகமை குறித்து புகார் அளிக்கப்பட்டிருப்பதையும் அமலாக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது அமலாக்க முகமை.
"கேரளாவில் இருந்த சக்திவாய்ந்த சிலர் இந்த வழக்கில் குறுக்கிடுகின்றனர். நான்காவது குற்றவாளியின் நடவடிக்கையின் காரணமாக, பண மோசடி தடுப்புப் பிரிவின் கீழ் நடத்தப்படும் விசாரணையைக் குலைக்க தொடக்கம் முதலே முயற்சி நடந்து வருகிறது," என்று அமலாக்க முகமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில் கேரள முதல்வருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தங்கக்கடத்தலில் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டி இருப்பதையும் அமலாக்க முகமை சுட்டிக்காட்டி உள்ளது.
எனினும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தமக்கும் தனது குடும்பத்தாருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என கேரள முதல்வர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

