புதுடெல்லி: கிட்டத்தட்ட மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மீண்டும் பறக்க உள்ளன. ஆனால், இம்முறை புதிய உரிமையாளரின் நிர்வாகத்தில் ஜெட் ஏர்வேஸ் புத்துயிர் பெற உள்ளது. வரும் செப்டம்பர் முதல் சரக்கு விமானங்களை அது இயக்கும்.
தொடர்ந்து விமானப் போக்குவரத்துத் துறையில் நிலைத்திருக்கும் வகையில் அடுத்த ஈராண்டுகளில் ரூ.1,300 கோடியை ஜேகேசி எனப்படும் அதன் புதிய நிர்வாகம் செலவிடும்.
விமானப் போக்குவரத்துச் சந்தையில் மீண்டும் இடம்பெறும் வகையில் சில மாற்றங்களை ஜெட் ஏர்வேஸ் செய்து உள்ளது.
27 ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் 2019 ஏப்ரல் மாதம் தனது இயக்கத்தை நிறுத்தியது. அதன் பின்னர் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் விதித்த பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்து மீண்டும் இயக்கும் உரிமையை ஜேகேசி நிறுவனம் பெற்றுள்ளது.
1992 ஏப்ரலில் நரேஷ் கோயல் என்ற வர்த்தகரால் தொடங்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் 1993ஆம் ஆண்டில் விமானங்களைப் பறக்கவிட்டது. சிறியதும் பெரியதுமாக 124 விமானங்களை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ், செப்டம்பர் மாதம் 11 சரக்கு விமானங்களுடன் மீண்டும் செயல்படும் என்று அதிகாரத்துவப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

