புதுடெல்லி: இந்தியா முழுவதும் 68 நகரங்களில் 2,877 மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டல் நிலையங்களை நிறுவ அரசு அனுமதியளித்துள்ளது.
'ஃபேம் இந்தியா' எனும் திட்டத்தின் கீழ் பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்கு விக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சு, 532 மின்சார வாகன மின்னூட்டல் நிலையங்களை நிறுவி யுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார், மின்சார வாகனங் களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு கடந்த 2015 ஆண்டு 'ஃபேம் இந்தியா' (FAME INDIA) எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது என்றார்.
"இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம், 2019 ஏப்ரல் முதல் 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப் படுகிறது. 'ஃபேம் இந்தியா' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ரூ.1,000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுப் போக்குவரத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் இந்தியா திட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன மின்னூட்ட நிலையங்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் கனரகத் தொழில்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார். "மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1,576 மின்னூட்ட நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
'ஃபேம் இந்தியா' திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 520 மின்னூட்டல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது," என்று அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்தார்.

