புதுடில்லி: அமலாக்கத்துறைக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமலாக்கத்துறையினர் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சில விதிகளை எதிர்த்து மெகபூபா முப்தி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், கைது செய்யப்படுவதற்கான ஆதாரங்களைக் காட்டாமல் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கு தடையற்ற அதிகாரம் அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று கூறினார்.
ஆனால் மத்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி பணமோசடி தடுப்பு சட்டத்தின் விதிகளை நியாயப்படுத்தியது.
மேலும், பணமோசடி நிதி அமைப்புகளுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி பணமோசடி தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு ஆதரித்தது.
இது தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
"பணமோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வது தன்னிச்சையான நடவடிக்கை அல்ல. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனை செய்ய, கைது செய்ய, வழக்குப்பதிவு செய்ய, 'சீல்' வைக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி உள்ளது.
"பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை களின் அமலாக்கத்துறை தகவல் அறிக்கையை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. இதுவும் எப்ஐஆர்-ம் (முதல் தகவல் அறிக்கை) ஒன்று அல்ல. 2002க்கு முன் நடந்த முறைகேடு புகார்களில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புசட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி உண்டு," என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

