பெங்களூரு: கர்நாடக மாநிலம் சூல்யா தாலுகா நெட்டாறு பகுதியில் வசிக்கும் தட்சிண கன்னடா மாவட்ட பாஜக யுவமோர்ச்சா மாவட்டச் செயலாளரான பிரவீனை (வயது 32) அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்து உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு நெட்டாறு பகுதியில் உள்ள தனது கோழி இறைச்சிக் கடையை மூடிக் கொண்டிருந்தபோது அவரை சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து, கோடாரி, வாளால் சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பாரதிய ஜனதா ஆட்சி நடத்தும் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரவீனைக் கொலை செய்தவர்கள் முகமூடி அணிந்து வந்துள்ளனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் கேரள மாநிலம் பதிவு எண்களை கொண்டதாகும். பிரவீன் கொலை குறித்து பெல்லாரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிைலயில் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி பா.ஜ.க. உறுப்பினர்கள் பலர் இரவி லிருந்து தெருவில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வினரின் போராட்டம் விடிய, விடிய நடந்தது.
புத்தூரில் உள்ள மருத்துவமனை முன்பாக இந்து அமைப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பெல்லாரி, நெட்டாறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. புத்தூர், சூல்யா, கடப்பா தாலுகா முழுவதும் இந்து அமைப்பினர் நேற்று வேலை நிறுத்தம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, படுகொலைச் சம்பவத்தை கண்டித்துள்ளார்.
"தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் கட்சித் தொண்டர் பிரவீன் காட்டு மிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடு பவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்," என்று டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரவீனின் உடல் பெல்லாரி அருகே நெட்டாறில் உள்ள வீட்டில் தகனம் செய்யப்படுகிறது. இதை யடுத்து புத்தூர், பெல்லாரி, சூல்யா ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

