புதுடெல்லி: குரங்கம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க இந்திய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
"சாத்தியமான மருந்தாக்க நிறுவனங்களுடன் ஏற்கெனவே பேச்சு நடத்தி வருகிறோம்," என்று தேசிய கொவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வினோத் குமார் பால் தெரிவித்தார்.
"எங்களுக்குத் தடுப்பூசி தயாரிக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது அறிந்ததே. இதனால் அரசு இதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா குரங்கம்மைப் பாதிப்பை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
அண்மையில் உலக சுகாதார நிறுவனமும் அந்நோயை உலக சுகாதார நெருக்கடியாகவும் அறிவித்தது. இந்த நிலையில் குரங்கம்மையைக் கண்டுபிடிக்கும் சோதனை நிலையங்களை 15 இடங்களில் இந்திய அரசு அமைத்துள்ளது. அந்த நிலையங்களில் இரண்டு அடுக்கு பிசிஆர் சோதனைகளை நடத்த போதுமான வசதிகள் இருப்பதாக டாக்டர் பால் தெரிவித்தார்.
இதுவரை இந்தியாவில் நான்கு பேருக்கு குரங்கம்மைப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

